தேம்ஸ் நதியில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு கண்டெடுப்பு!

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு தேம்ஸ் நதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பிரிண்ட்ஃப்ர்ட் பகுதியில் தேம்ஸ் நதியில் கடந்த செப்டம்பர் மாதம் கிராபிக் டிசைனரான சைமன் ஹண்ட் தனது படகில் தனியாக பயணித்துக்கொண்டிருதார். அப்போது, நதியின் கரையில் ஆழம் குறைந்த, பாறைகள் நிறைந்த பகுதியில் கருப்பு நிறத்தில் வித்தியாசமான கட்டை வடிவிலான பொருள் கிடந்ததை கண்டார்.

இதையடுத்து, அந்த பொருளை எடுத்துப்பார்த்த சைமன் அது ஒரு எலும்பு என்பதை கண்டுபிடித்தார். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து, சைமனை சந்தித்த போலீசார் அவரிடம் இருந்த அந்த எலும்பை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், அந்த எலும்பு மிகவும் கடினமாகவும், வித்தியாசமாகவும் இருந்ததால் அதை பரிசோதனை செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட அந்த எலும்பு எந்த காலத்துடையது என்பது தற்போது தெரியவந்துள்ளது. கார்பன் பரிசோதனையில் அந்த எலும்பு கற்காலத்தின் இறுதி ஆண்டுகளை சேர்ந்தது என்பது தெரியவந்தது. அதாவது, அந்த எலும்பு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த எலும்பு கிமு 3,516 மற்றும் 3,365 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டு காலத்தை சேர்ந்தது எனவும், இந்த எலும்பை உடையவர் 5 அடி 7 இன்ச் (170செமீ) உயர் கொண்டிருக்க வேண்டும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேவேளை அந்த நபர் ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த எலும்பு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றூ வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!