2 வயது குழந்தையின் வாயில் குத்தி மறுபக்கம் வெளிவந்த கம்பி..!

கட்டுமான பணி நடந்த பகுதியில் விளையாடியபோது கட்டப்பட்டு வரும் தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தையின் வாயில் கம்பி குத்தி மறுபக்கம் வெளிவந்தது. டாக்டர்கள் 45 நிமிடங்களில் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரத்தை சேர்ந்தவர் குழந்தையேசு (வயது 40). இவரது மனைவி செலின். இவர்களுக்கு 2 வயதில் ஆல்வின் ஆன்டோ என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் வீட்டின் அருகே கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (7-ந்தேதி) மாலை குழந்தை ஆல்வின் கட்டிட பணி நடந்து வந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு கட்டப்பட்டு வந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை ஆல்வின் எதிர்பாராத விதமாக விழுந்ததாக தெரிகிறது. தலைக்குப்புற தண்ணீர் தொட்டியில் விழுந்ததால் அங்கு இருந்த இரும்பு கம்பி குழந்தை வாய் வழியே குத்தி முதுகு புறமாக வெளியே வந்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் கம்பியை வெட்டி குழந்தையுடன் சேர்த்து உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர்.

அங்கு அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் வேல்முருகன் தலைமையில், டாக்டர்கள் சீனிவாசன், நிர்மல்குமார் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர் 45 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் வாய் பகுதியில் குத்தி மறுபக்கம் வெளிவந்த கம்பியை அகற்றினர். இதுகுறித்து டாக்டர் வேல்முருகன் கூறுகையில், ‘குழந்தை வாயில் குத்திய கம்பியானது 59 செ.மீ நீளமுடையது. மேலும் கம்பி குத்திய பகுதி குழந்தையின் சுவாசகுழல், மூளை ரத்தகுழாய், நரம்பு மண்டலம் அருகே அமைந்துள்ளது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை காப்பாற்றி உள்ளோம்’.

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு குழந்தை உயிரைக் காப்பாற்றிய டாக்டர்கள் குழுவை ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் எழிலரசி பாராட்டினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!