முதலிரவு முடிந்ததும் பணத்துடன் மாயமான மணமகன்!

கேரளாவில் முதலிரவு முடிந்ததும் மணமகளின் 30 பவுன் நகை மற்றும் பணத்துடன் மாயமான மணமகனை போலீசார் அவரது முதல் மனைவில் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

கேரள மாநிலம் அடூர், காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் ரஷீத் (வயது 30).

அசாருதீன் ரஷீத்துக்கும் பழக்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் மணமகள் வீட்டில் கடந்த 30-ந்தேதி நடந்தது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்து மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் மணமகள் வீட்டில் விருந்து நடந்தது. அன்று இரவு அவர்களுக்கான முதலிரவு சடங்கும் மணமகள் வீட்டிலேயே நடைபெற்றது.

முதலிரவு முடிந்து மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் மணமகன் திடீரென வீட்டில் இருந்து வெளியே கிளம்பினார். மணமகள், அவரிடம் எங்கே செல்கிறீர்கள் என்ற போது, நெருங்கிய நண்பன் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்தது. அவருக்கு உதவுவதற்காக உடனே செல்ல வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். மணமகள் வீட்டாரும் அதனை நம்பி அவரை வெளியே செல்ல அனுமதித்தனர்.

வீட்டை விட்டு சென்ற மணமகன், அன்று முழுவதும் வீட்டுக்கு வரவில்லை. மணமகளிடமும் பேசவில்லை. எனவே அவரை உறவினர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள், முதலிரவு அறைக்கு சென்று பார்த்த போது அங்கு மணமகள் அணிந்திருந்த 30 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதுபோல அறையில் இருந்த ரூ.2.75 லட்சம் பணத்தையும் காணவில்லை.

இதனால் பதறி போன மணப்பெண்ணின் உறவினர்கள் அடூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மாயமான மணமகன் அசாருதீன் ரஷீத்தை தேடினர்.

இதில் அசாருதீன் ரஷீத் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் அவரது முதல் மனைவி ஆலப்புழாவை அடுத்த சேப்பாடு பகுதியில் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் சேப்பாடு சென்றபோது அங்கு அசாருதீன் ரஷீத் மறைந்திருப்பதை கண்டனர். அவரை கைது செய்த போலீசார் அடூர் அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!