சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் அகல வழிபட வேண்டிய கோவில்!

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கடன் பிரச்சினை அகலவும், நீண்ட நாள் நோய் தீர, என அனைத்து பிரச்சினைகளுக்கும், இத்தல லட்சுமி நாராயணரை வணங்கி வழிபட்டு வந்தால் போதுமானது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில். இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது.

இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள்.

குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.

கோவிலின் தென்பகுதியில் அஷ்டலட்சுமிக்கு தனிச் சன்னிதி உள்ளது. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், இந்த சன்னிதிக்கு வந்து தாயாரை மனமுருக வேண்டி, விளக்கு ஏற்றி வழிபட்டால், மது பழக்கத்தில் இருந்து விடுபடுவர் என்பது நம்பிக்கை. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு நடைபெறும் ராகு கால பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் அகலும் என்கிறார்கள்.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கடன் பிரச்சினை அகலவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேண்டுபவர்கள், நீண்ட நாள் நோய் தீர, தொழில் விருத்தியாக, நலிந்த தொழில் மீண்டும் நல்ல முறையில் நடைபெற என அனைத்து பிரச்சினைகளுக்கும், இத்தல லட்சுமி நாராயணரை வணங்கி வழிபட்டு வந்தால் போதுமானது. தங்களின் கோரிக்கை நிறை வேறியதும் பக்தர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சித்தூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், வேப்பஞ்சேரி லட்சுமி நாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!