ஒரே நேரத்தில் 2 காதல்… கடலில் குதித்த முதல் காதலி – காதலனுக்கு நேர்ந்த சோகம்!

மங்களூரு அருகே ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்ததை அறிந்து முதல் காதலி கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை, காப்பாற்றிய காதலன் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் காதல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் முன்னூர் அருகே ராணிபுரா பகுதியை சேர்ந்தவர் லியோ டிசோசா(வயது 29). இவரும், அதேப்பகுதியை சேர்ந்த அஸ்விதா(22) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்கள், கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். நன்றாக போய் கொண்டிருந்த இவர்களது காதல் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. அதாவது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லியோ டிசோசாவை, அதேப்பகுதியை சேர்ந்த டாக்லின் என்ற இளம்பெண் காதலித்துள்ளார். அவர், லியோ டிசோசாவிடம் காதலை தெரிவித்துள்ளார். அவரது காதலை லியோ டிசோசாவும் ஏற்றுள்ளார். இதையடுத்து அவர், ஒரே நேரத்தில் 2 பெண்களான அஸ்விதாவையும், டாக்லினையும் காதலித்து வந்துள்ளார்.

கடலில் குதித்த முதல் காதலி

இந்த விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்விதாவுக்கு தெரியவந்தது.
இதையடுத்தது அஸ்விதா, காதலன் லியோ டிசோசாவிடம் தன்னை மட்டும் தான் காதலிக்க வேண்டும், 2-வது காதலியை கழற்றி விடும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்த பிரச்சினையை பேசி ஒரு முடிவு கட்ட அஸ்விதா திட்டம் திட்டினார்.

அதன்படி அஸ்விதா, காதலன் லியோ டிசோசாவிடம் டாக்லினை அழைத்து கொண்டு சோமேஸ்வரா கடற்கரைக்கு வரும்படி கூறியுள்ளார். அதன்படி அஸ்விதா, காதலன் லியோ டிசோசா, டாக்லின் ஆகிய 3 பேரும் கடற்கரைக்கு வந்தனர். அப்போது அஸ்விதா, டாக்லினிடம் தனது காதலனுடனான காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் டாக்லின், லியோ டிசோசாவை தான் காதலிப்பேன் என்றும், நீ வேண்டுமானால் உனது காதலை கைவிட்டு செல்லும்படியும் கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டாகியுள்ளது. இதனால் மனம் உடைந்த அஸ்விதா தற்கொலை செய்ய முடிவு எடுத்து கடலில் குதித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த லியோ டிசோசா ஓடி சென்று அவரை காப்பாற்ற கடலில் குதித்தார். அதன்படி லியோ டிசோசா, முதல் காதலி அஸ்விதாவை நீண்ட நேரம் போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

வாலிபர் சாவு

ஆனால் கரைக்கு வந்ததும் கடல் நீரை அதிகமாக குடித்த லியோ டிசோசா மயக்கம் போட்டு கீேழ விழுந்தார். மேலும் அஸ்விதாவும் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர் பரிசோதித்து பார்த்தனர். அதில் லியோ டிசோசா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அஸ்விதாவுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த உல்லால் போலீசார் ஆஸ்பத்திரிக்கும், சம்பவ இடத்திற்கும் சென்று விசாரணை நடத்தினர். அதில் ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலன் காதலித்த விஷயம் அறிந்து முதல் காதலி கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதும், அவரை காப்பாற்றிய காதலன் லியோ டிசோசா உயிரிழந்ததும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மங்களூருவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!