4 வயது சிறுவனை கொடூரமாக கொன்ற பக்கத்துவீட்டுப் பெண் பகீர் தகவல்..!

பண்ருட்டி அருகே 4 வயது சிறுவனை படுகொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன்கள் அபி(வயது 11), அஸ்வத்(4). இந்த நிலையில் அஸ்வத் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென அவனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

இது குறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் மாயமான சிறுவனை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு சிறுவனின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக பல்வேறு இடங்களில் தேடி வருவதாகவும், சிறுவனை கண்டுபிடித்து தருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை கீழக்கொல்லையில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் சிறுவன் அஸ்வத் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தான். இதை பார்த்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அஸ்வத்தின் உடலில் இருந்த காயங்களை வைத்து பார்த்தபோது அவனை மர்மநபர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதனிடையே சிறுவனை கொலை செய்த குற்றவாளியை கைது செய்யக்கோரி சிறுவனின் உறவினர்கள் சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் வீட்டின் அருகில் வசித்து வரும் முருகவேல் மகள் ரஞ்சிதா(வயது 25) என்பவர், அஸ்வத்தை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரியவந்தது. இதனிடையே தலைமறைவான ரஞ்சிதாவை போலீசார் வலைவீசி தேடினர்.

இந்த நிலையில் வெளியூர் செல்வதற்காக கீழகுப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ரஞ்சிதாவை நேற்று மாலை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது பெற்றோருக்கும், அஸ்வத்தின் பெற்றோருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதற்கு பழிவாங்குவதற்காக சிறுவன் அஸ்வத்தை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி சிறுவனை முந்திரிதோப்புக்குள் அழைத்துச்சென்றேன். அங்கு அவனது முகத்தை தரையில் அழுத்தி, தேய்த்தேன். இதில் அவனது முகத்தில் காயம் ஏற்பட்டது. மேலும் கழுத்தை நெரித்து சிறுவன் அஸ்வத்தை கொலை செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!