அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல வருடங்களுக்கு முன்னர் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என பாலியல் பட நடிகை ஒருவர் அளித்த செவ்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டோர்மி டேனியல்ஸ் எனும் பெண்ணே தன்னுடன் டொனால்ட் ட்ரம்ப் பாலியல் உறவு கொண்டாரென செவ்வி அளித்துள்ளார்.
மேற்படி பெண்ணுக்கு டொனால்ட் ட்ரம்ப் தரப்பினால் 130,000 டொலர் வழங்கப்பட்டதாக அமெரிக்க பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2016 நவம்பர் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, 2017 ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கு பல வருடங்களுக்கு முன்னர் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Touch (டச்) எனும் சஞ்சிகைக்கு மேற்படி செவ்வியை ஸ்டோர்மி டேனியல்ஸ் 2011 ஆம் ஆண்டு அளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது அவர் கோடீஸ்வர வர்த்தகர், விளையாட்டு ஊக்குவிப்பாளர், அழகுராணி போட்டிகளை நடத்தும் நிறுவனத்தின் உரிமையாளர் என்றே டொனால்ட் ட்ரம்ப் பிரபலமாகியிருந்தார்.
ஸ்டோர்மி டேனியல்ஸ் தனக்கு அளித்த செவ்வியை மேற்படி சஞ்சிகை வெளியிடாமலேயே வைத்திருந்தது. ஆனால், கடந்த 18 திகதி அச்சஞ்சிகை மேற்படி செவ்வியை வெளியிட்டது. 38 வயதான ஸ்டோர்மி டேனியல்ஸின் உண்மையான பெயர் ஸ்டெஃபனி கிளிஃபர்ட். அமெரிக்க செக்ஸ் படத் துறையில் மிகப் பிரபலமானவர்களில் ஒருவர் இவர். திருமணமான இவருக்கு ஒரு மகளும் உண்டு.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம், நிதி சேகரிப்புக்கான கோல்வ் சுற்றுப்போட்டியொன்றின் பின்னர், நெவேடா மாநிலத்திலுள்ள ஹோட்டல் அறையொன்றில் டொனால்ட் ட்ரம்புடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டதாக மேற்படி செவ்வியில் ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார்.
இச்செவ்வி வெளியாகுவதற்கு 6 தினங்களுக்கு முன்னர், கடந்த 12 ஆம் திகதி அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையானது டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்டோர்மி டேனியல் தொடர்பாக மற்றொரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டிருந்தது.
டொனால்ட் ட்ரம்புக்கும் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கும் இடையில் நிலவிய திருமணத்துக்குப் புறமான பாலியல் உறவு விவகாரம் தொடர்பாக எதுவும் பேசாமல் இருப்பதற்காக கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் டொனால்ட் ட்ரம்ப் தரப்பினால் 130,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 2 கோடி ரூபா) வழங்கப்பட்டது என்பதே அச்செய்தி.
டொனால்ட் ட்ரம்பின் பிரத்தியேக சட்டத்தரணி மைக்கல் கோஹென், இதற்காக தனியார் நிறுவனமொன்றை ஸ்தாபித்து, மேற்படி பணத்தை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு வழங்கியதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்திருந்தது. அதன் பின்னரே டச் சஞ்சிகை, 2011 ஆம் ஆண்டு ஸ்டோர்மி டேனியல்ஸ் அளித்த செவ்வியை வெளியிட்டது.
டொனால்ட் ட்ரம்புக்கும் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கும் இடையில் பாலியல் தொடர்புகள் ஆரம்பமானதாக கூறப்படும் காலத்தில் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் 4 மாத குழந்தையாக இருந்த மகன் பெரோன் ட்ரம்பை பராமரிப்பதில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், ட்ரம்புக்கும் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கும் இடையிலான பாலியல் உறவு குறித்து அறிந்தவுடன் மெலனியா ட்ரம்ப் விவாகரத்துக்கு விண்ணப்பிப்பாரா எனவும் அச்சஞ்சிகை கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில், உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் சுவிட்ஸர்லாந்துக்குச் சென்றார். இவ்விஜயத்தின் போது, அவரின் மனைவி மெலேனியா ட்ரம்ப் கலந்துகொள்ளாதமை பலரையும் வியப்படையச் செய்தது.
ஸ்டோர்மி டேனியல்ஸ் விவகாரமே இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சிலர் கூறினர். ஆனால், மெலேனியா ட்ரம்ப் இதை மறுத்துள்ளார். இதேவேளை, பாலியல் உறவு மற்றும் பணம் வழங்கப்பட்ட விவகாரத்தை டொனால்ட் ட்ரம்ப் தரப்பும் ஸ்டோர்மி டேனியல்ஸ் தரப்பும் நிராகரித்துள்ளன.
டொனால்ட் ட்ரம்பிடம் தான் பணம் பெற்றதாக வெளியான செய்தி பொய்யானது என ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார். தானும் டொனால்ட் ட்ரம்பும் ஒரு சில தடவைகள் பொது இடங்களில் இணைந்து தோன்றியமை மாத்திரமே ட்ரம்புடனான தனது செயற்பாடுகள் எனவும், அவ்வேளையில் டொனால்ட் ட்ரம்ப் அங்கிருந்த அனைவருடனும் தொழிற்சார் தன்மையுடனும் ஜென்டில் மேனாகவும் நடந்துகொண்டதாகவும் ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், திருமணத்துக்குப் புறம்பான பாலியல் உறவை மறைப்பதற்காக செக்ஸ் திரைப்பட நடிகைக்கு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் டொனால்ட் ட்ரம்ப் பணம் வழங்கினார் எனக் கூறப்படுவது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஒக்டோபர் 17 ஆம் திகதியே இப்பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின் சுமார் இரு வாரங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை அதிர்ச்சிகரமாக டொனால்ட் ட்ரம்ப் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்படி பணம் வழங்கல் குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை திணைக்களத்திடமும், அமெரிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் அரசியல் கண்காணிப்பு அமைப்பொன்று முறைப்பாடு செய்துள்ளது.-Source: metronews
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!