தொழிலதிபர் வீட்டில் மலை போல் குவித்துள்ள பணம்; சோர்வடைந்த அதிகாரிகள்!

உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில் அதிபர் வீட்டில் 150 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கட்டாக பணத்தை எண்ணி எண்ணி… அதிகாரிகள் சோர்வடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பிரபல தொழில் அதிபரான பியூஸ் ஜெயின்-க்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலை, குளிர்பான கிடங்கு, பெட்ரோல் நிலையத்தில் நேற்று காலை 11 மணிக்கு திடீரென வருமானவரி த்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கினர்.

பல மணி நேரமாக நீடித்து வரும் சோதனையில் 150 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக முதற்கட்டமாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அளவுக்கு அதிகமான ரொக்கம் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் பேரில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் “பான்மசாலா” பொருட்களை உரிய பில் இல்லாமல் போலியான இன்வாய்ஸ்கள் தாயரிக்கப்பட்டு அதன் மூலம் அனுப்பி வைத்து வருமானத்திற்கு அதிகமான பணம் சேர்த்தது தெரியவந்துள்ளது.

பியூஸ் ஜெயின்-க்கு சொந்தமான அனந்தபுரி இல்லத்தில் பணம் எண்ணும் 4 இயந்திரங்கள் உதவியுடன் கைப்பற்றப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணி வருகின்றனர்.

இதுவரை 150 கோடி ரூபாய் ரொக்கம் எண்ணப்பட்டுள்ளதாகவும்,ஜி.எஸ்.டி முறைகேடுகளும் நடந்துள்ளாதால் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் ஜி.எஸ்.டி அதிகாரிகளும் வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை தவிர மும்பை,குஜராத் மாநிலத்திலும் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பான்மசாலா மட்டுமல்லாமல் மும்பையில் இருந்து வாசனை திரவியங்களை இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்புவதிலும் முறைகேடு நடந்துள்ளதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், இவருக்கு சொந்தமான தொழிற்சாலையில் போலியான இன்வாய்ஸ்-கள் மூலம் சரக்குகளை அனுப்ப தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒரே வீட்டில் இருந்து 150 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றபட்டுள்ள நிலையில் பணத்தை பாதுகாக்க துணை ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!