மருமகனை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய மாமியார்!

தென்காசி டிரைவர் கொலையில் அதிரடி திருப்பமாக, அவரை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய மாமியார் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேர் சிக்கினர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கார் டிரைவர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 30), கார் டிரைவர். இவருடைய மனைவி மாலா (26). இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.

கடந்த 3-ந்தேதி அரவிந்த் தென்காசிக்கு காரில் அழைத்து வரப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் தென்காசி கீழப்புலியூரை அடுத்த பாட்டாகுறிச்சியில் உள்ள கல்குவாரி குட்டையில் வீசப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், அரவிந்த் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இந்த கொலை தொடர்பாக நேற்று முன்தினம் பொன்னரசு (20) என்பவரை போலீசார் கைது செய்து இருந்தனர். மேலும் சீதாராமன், மணிகண்டன் ஆகிய 2 பேர் சங்கரன்கோவில் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மாமியார் கைது

கைதான பொன்னரசுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக நேற்று அரவிந்தின் மாமியார் பொன்ராணி (44), கீழப்புலியூரை சேர்ந்த கணேசன் மகன் மனோஜ் முத்துகிருஷ்ணன் (25), மற்றொரு பூதப்பாண்டி மகன் தம்பிரான் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பொன்ராணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

பியூட்டி பார்லர்

பொன்ராணியின் மகள் மாலா விளாத்திகுளத்தில் பியூட்டி பார்லர் நடத்தியுள்ளார். அதனை நடத்தக்கூடாது என்று மாலாவின் கணவர் அரவிந்த் கூறியுள்ளார். மேலும் அரவிந்த் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தனது மகள் மாலாவுடன் அரவிந்த் சரியாக வாழ்க்கை நடத்தவில்லை என்று கூறி பொன்ராணி விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், மாலா இதற்கு சம்மதிக்கவில்லை. மேலும் மாலா தனது கணவர் உடனேயே இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக மாமியார் பொன்ராணிக்கும், மருமகன் அரவிந்திற்கும் இடையே தகராறு வலுத்துள்ளது. இதனால் பொன்ராணி மருமகனை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளார்.

கூலிப்படையை ஏவி…

இதுபற்றி பொன்ராணி கீழப்புலியூரில் தனக்கு தெரிந்த சீதாராமன் மற்றும் அவரது நண்பர்களிடம் கூறியுள்ளார். மேலும், மருமகனை கொலை செய்ய ரூ.8 லட்சம் தருவதாக பேரம் பேசியுள்ளார். இதில் முதற்கட்டமாக ரூ.4 லட்சம் பல தவணைகளில் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தென்காசியை அடுத்த சுரண்டையில் வைத்து அரவிந்தை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு கடந்த 3-ந் தேதி அரவிந்தை தென்காசிக்கு வரவழைத்து கொலை செய்து உடலை கல்குவாரி தண்ணீரில் வீசி உள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக அருணாசலம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கூலிப்படையை ஏவி மருமருகனை மாமியாரே ெகாடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!