அழகாக இல்லை… திருமணம் செய்ய மறுத்த ஆசிரியர் – பெண் என்ஜினீயர் விபரீத முடிவு!

ராமநாதபுரம் அருகே காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த ஆசிரியரால் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.

ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 11-வது தெருவை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகள் சவுமியா (வயது 25) பி.இ. பட்டதாரி. இவர் அரசுப்பணி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

அவரிடம் ராமநாதபுரத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சேக் முகம்மது என்ற அபு (27) அறிமுகமாகி பழகி செல்போன் எண்ணை வாங்கி பேசி வந்துள்ளார்.

சவுமியாவை காதலிப்பதாகவும், அவரை, திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகியுள்ளார். அவரை தனது வீட்டுக்கும் வரவழைத்துள்ளார்.

இதன்பின்னர் திருமணம் செய்து கொள்ள சேக் முகம்மது மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே இவர்களின் திருமணத்துக்கு முதலில் சம்மதம் தெரிவித்த சேக்முகம்மதுவின் பெற்றோர், பின்னர் சவுமியா அழகாக இல்லை, வரதட்சணை அதிகம் தர வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டார்களாம்.

இதனால் மனவருத்தம் அடைந்த சவுமியா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை முனியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பாக சவுமியா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தனது தற்கொலைக்கு சேக் முகம்மது மற்றும் அவருடைய பெற்றோர், திருப்பூரில் உள்ள மாமா ஆகியோர்தான் காரணம் என்றும், மேலும் பல்வேறு தகவல்களையும் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சேக் முகம்மது உள்ளிட்டோரை போலீசார் தேடிவருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!