நடுவழியில் நரிக்குறவர் குடும்பத்தை இறக்கி விட்ட கண்டக்டர்!

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த நரிக்குறவா் குடும்பத்தினர் நடுவழியில் கண்டக்டரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்த செல்வமேரி, மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மீன் கூடைகளுடன் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பஸ் கண்டக்டர் அவரை இறக்கிவிட்டார்.

இதுதொடர்பாக வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அரசு பஸ்சில் பயணம் செய்த நரிக்குறவா் குடும்பத்தினர் நடுவழியில் கண்டக்டரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 7 வயதுடைய குழந்தை என நரிக்குறவர் குடும்பத்தினர் 3 பேர் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தனர். அப்போது திருநெல்வேலி செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. உடனே அதில் நரிக்குறவர் குடும்பத்தினர் ஏறி ஊருக்கு புறப்பட தயாராக இருந்தனர்.

அந்த பஸ் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றது. அப்போது பஸ்சில் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி உள்பட 3 பேரையும் பஸ்சில் இருந்து கண்டக்டர் இறக்கி விட்டுள்ளார். மேலும் நரிக்குறவர் குடும்பத்தின் உடைமைகளையும் பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளார். அந்த சமயத்தில் குழந்தை பயந்து கதறி அழுதது. அப்போது அவர்கள் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்ட காட்சிகளை வீடியோவாக சிலர் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. பின்னர் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நரிக்குறவர் குடும்பத்தை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட விவகாரம் தொடர்பாக திருவட்டார் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் நெல்சன் (வயது 45), கண்டக்டர் ஜெயதாஸ் (44) ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அரவிந்த் உத்தரவிட்டார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!