கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கொலை மிரட்டல்!

‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து பாஜக எம்.பி. கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் எம்.பி.யாக செயல்பட்டு வருகிறார். பாஜகவை சேர்ந்த கம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கவுதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து இமெயில் மூலம் நேற்று கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

இந்த கொலை மிரட்டல் இமெயில் தொடர்பாக கவுதம் கம்பீர் சார்பில் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கம்பீர் இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பெயரில் அனுப்பப்பட்ட இந்த இமெயில் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில் ’ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பெயரில் காஷ்மீரில் ஏதேனும் பயங்கரவாத அமைப்பு உருவெடுத்து வருகிறதா? என்பது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!