அரிச்சல்முனை கடற்கரையை விழுங்கிய கடல் – மணல் பரப்பு மீண்டும் உருவாகுமா?

அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றியிருந்த மணல் பரப்பு பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு, தற்போது கடலாக காட்சி அளித்து வருகிறது.

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை. அரிச்சல் முனைவரையிலும் சாலை அமைக்கப்பட்ட பின்னர் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை எல்லையில் உள்ள சாலை வளைவை சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் தூர பரப்பளவில் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதி விசாலமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் சாலை வளைவில் வாகனங்களை நிறுத்திவிட்டு மிக நீண்ட தூரம் வரையிலும் கடற்கரை மணல் பரப்பில் நடந்து சென்றும், ஓடி விளையாடி மகிழ்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்தனர். செல்போனிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இவ்வாறு மணல் பரப்பாக காணப்பட்ட தனுஷ்கோடி அரிச்சல்முனையை கடற்கரையை கிட்டத்தட்ட கடல் விழுங்கிவிட்டது. இதனால் அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றியிருந்த மணல் பரப்பு பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு, தற்போது கடலாக காட்சி அளித்து வருகிறது.

தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றி கடல் நீர் குறைந்து, மணல் பரப்பு மீண்டும் உருவாகுமா? என்பது சந்தேகம்தான். இருந்தாலும் நில அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு கடற்கரை மணல் பரப்பு மீண்டும் உருவாக வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!