11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- டாக்டர் ரஜினிகாந்த் கைது !

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த டாக்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் வடக்கு பிரதட்சனம் சாலையில் ஜி.சி. எலும்பு மூட்டு மருத்துவமனை உள்ளது. இங்கு கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த புகாரில், 11-ம் வகுப்பு படிக்கும் எனது 17 வயது மகளுக்கு தான் வேலை பார்த்த மருத்துவமனையின் டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டர் ரஜினிகாந்த், மருத்துவமனையின் மேலாளர் சரவணன் மூலம் அந்த பெண்ணின் மகளான 11-ம் வகுப்பு மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து தனது அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனை மேலாளர் சரவணன் மற்றும் டாக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் இருவர் மீதும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மருத்துவமனை மேலாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே டாக்டர் ரஜினிகாந்த் தலைமறைவாகி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் இரண்டு தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு அவரை வேலாயுதம்பாளையத்தில் வைத்து போலீசார் கைது செய்து கரூர் மாவட்ட மகிளா நீதி மன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர்.

நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் டாக்டர் ரஜினிகாந்த் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!