மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த பெயிண்டருக்கு நடந்த பரிதாபம்..!

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மொபட்டின் பின்னால் கார் மோதியது. அதனால் மேம்பால சுவற்றில் மொபட் மோதி கீழே விழுந்ததில் பெயிண்டர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

பெயிண்டர் பலி

வேலூர் சத்துவாச்சாரி 4-ம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 35), பெயிண்டர். இவர் நேற்று காலை வேலூருக்கு வேலை நிமித்தமாக சென்றார். பின்னர் அங்கிருந்து மதியம் 1 மணியளவில் மொபட்டில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த கார் திடீரென மொபட்டின் பின்பகுதியில் மோதியது.

அதனால் கட்டுப்பாட்டை இழந்த மொபட் மேம்பால பக்கவாட்டு சுவற்றில் மோதியது. அதைத்தொடர்ந்து காரும் சுவற்றில் மோதியபடி நின்றது. இதில், தூக்கி வீசப்பட்ட குமரன் கிரீன்சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் அணுகுசாலையை ஒட்டியுள்ள மண்தரையில் விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான மொபட், காரும் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். அதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டிரைவரிடம் விசாரணை

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சத்துவாச்சாரியை சேர்ந்த கார் டிரைவர் முஜித்திடம் (20) விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மொபட்டின் மீது கார் மோதி விபத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து பெயிண்டர் பலியான சம்பவம் சத்துவாச்சாரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!