ஆங் சான் சூகியின் உதவியாளருக்கு 20 ஆண்டுகள் சிறை!

மியான்மரில் ஆங் சான் சூகியின் உதவியாளரும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.

இதனை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு போராட்டங்கள் வெடித்தது. மக்கள் போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம்கொண்டு அடக்கி வருகிறது. இதில், ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மியான்மரை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஆங் சாங் சூகியின் கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி எம்.பி.க்கள் பலரையும் ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் அவைத்தலைவரும், எம்.பியும், ஆங்சாங் சூகியின் நெருங்கிய உதவியாளருமான வின் ஹிடின்(80)-ஐ ராணுவத்தினர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கைது செய்தனர். அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையில் வின் ஹிடின் தேசதுரோகத்தில் ஈடுபட்டதாக கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்த குற்றத்திற்காக வின் ஹிடினுக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனையை கோர்ட்டு விதித்துள்ளது.

இதனை தொடர்ந்து, 80 வயதான வின் ஹிடின் சிறையில் அடைக்கப்பட்டார். ஆங் சான் சூகியின் உதவியாளரான 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் கைதாகி சிறையில் உள்ள பிற தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!