கணவனை தேடிச்சென்ற இளம்பெண்- கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து கதறல்!

திருவள்ளூர் மாவட்டம் அயநல்லூர் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகள் அமுல். இவர் கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். தனது பணிக்கு தினமும், ரயில் மூலம் சென்னைக்கு வேலைக்கு செல்லும்போது, இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காரணி கிராமத்தில் வசித்து வந்த வேறு சமூகத்தை சேர்ந்த கௌதம் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு கௌதம் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அமுலை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இரண்டு வருடங்களாக சென்னையில் வசித்து வந்த காலத்தில் வார விடுமுறை நாளில், மட்டும் கௌதம் தனது தந்தை வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்காக தமது அக்கா ஊரான ஆவூரில் அமுலும், கௌதமும் குடி பெயர்ந்துள்ளனர். கடந்த மாதம் அமுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் கடந்த 17-ஆம் தேதி கௌதமின் உறவினர் இறந்துவிட்டதாக வந்த தகவலின் பேரில் காரணியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்ற கௌதம் வீடு திரும்பவில்லை. அமுல் தமது கணவரது செல்போன் எண்ணிற்கு தொடர்புகொண்ட போதும் பேச முடியாமல் போனது, இதனால் சந்தேகமடைந்த அமுலின் உறவினர்கள் கௌதமின் ஊருக்கு சென்ற போது கௌதம் இறந்துவிட்டதாக அங்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் ஒட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமுல் ஒரு மாதமே நிரம்பிய தனது கைக்குழந்தையுடன் தமது கணவரின் மரணத்தை தம்மிடம் மறைத்த, அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை சாதி மறுத்து திருமணம் செய்துகொண்ட காதல் கணவரின் மரணத்தை, மனைவிக்கு தகவல் கொடுக்காமல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சடலத்தை எரித்துள்ளதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது கணவரை ஆணவக்கொலை செய்துவிட்டு தடயங்களை மறைப்பதற்காக, தமக்கு தகவல் கொடுக்காமல் அவசர அவசரமாக கௌதமின் சடலத்தை அவருடைய உறவினர்கள் எரித்து விட்டதாக, அமுல் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளதால், இது குறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைக்குழந்தையுடன் வந்து பெண் தனது கணவரை, ஆணவக்கொலை செய்து விட்டனர் என புகார் அளித்தது இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: abp-epaper * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!