இரவில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த தாய்-மகன் எடுத்த சோக முடிவு..!

நாகர்கோவிலில் கடன் தொல்லை காரணமாக சயனைடு சாப்பிட்டு தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 48).

தங்க நகை வைக்கும் பெட்டி செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு சஞ்சின் (வயது 17), சஞ்சித் சக்திவேல் (14) என்ற 2மகன்கள் உள்ளனர். சுரேஷ் குமாருடன் அவரது தாயார் சாந்தகுமாரி (70) என்பவரும் வசித்து வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமார் குடும்பத்தோடு ராமவர்மபுரம் மேற்கு வெள்ளாளர் காலனியில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியேறினார். சுரேஷ் குமாருக்கு சரிவர வேலை இல்லாமல் இருந்தது. கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் சுரேஷ்குமார் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று மாலை சுரேஷ்குமாரின் மனைவி மஞ்சுளாவும், மகன்களில் ஒருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்றனர். வீட்டில் சுரேஷ்குமார், அவரது தாயார் சாந்தகுமாரியும் ஒரு மகனும் இருந்தனர். மஞ்சுளா வீட்டிற்கு வருவதற்கு இரவு நேரமாகி விட்டதால் வீட்டில் இருந்த மகன் தூங்க செல்வதாக தந்தையிடம் கூறி விட்டு மற்றொரு அறையில் சென்று தூங்கினார்.

சுரேஷ்குமாரும், சாந்த குமாரியும் பேசிக் கொண்டி ருந்தனர். இரவு மஞ்சுளா வீட்டிற்கு வந்தபோது சுரேஷ்குமார், சாந்தகுமாரி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சுரேஷ்குமார், சாந்தகுமாரி உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் சுரேஷ் குமார், சாந்தகுமாரி இருவரும் கடன் தொல்லை காரணமாக சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்து கொண்ட சுரேஷ்குமார், சாந்தகுமாரி உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. அங்கு அவரது உறவினர்கள் திரண்டிருந்தனர்.

தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!