வீதியில் போலீசார் தாக்கியதால் தீக்குளித்த டிரைவர் மணிகண்டன் பரிதாபமாக மரணம்..!


நெல்லையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது28). இவர் தாம்பரத்தில் தங்கி கிண்டியில் உள்ள கால்டாக்சி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்தார்.

கடந்த 24-ந்தேதி தரமணி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பகுதியில் காரில் சென்றபோது மணிகண்டன் சீட் பெல்ட் அணியாததால் வாகன சோதனையில் ஈடுபட்ட வேளச்சேரி போக்குவரத்து போலீசார் 4 பேர் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது போலீசாருக்கும் மணிகண்டனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென்று அங்கிருந்து சென்று பாட்டிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து தீக்குளித்தார்.

இதில் அலறி துடித்த அவரை பொதுமக்கள் தீயை அணைத்து மீட்டனர். அப்போது சீட்பெல்ட் அணியாததால் போலீசார் தன்னை தாக்கியதால் அவமானம் அடைந்து தீக்குளித்ததாக தெரிவித்தார்.

உடல் கருகிய அவர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தாமரைச் செல்வன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மணிகண்டன் இறந்துள்ளதால் சப்- இன்ஸ்பெக்டர் தாமரைச் செல்வன் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!