திருமணமான 7 மாதத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் திருமணமான 7 மாதத்தில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவர், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

சென்னை கிண்டி லேபர் காலனி லயன்ஸ் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர் நித்யானந்தன் (வயது 34). லோடு வேன் டிரைவர். இவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி (23) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

புவனேஸ்வரி தனது அக்காவின் கணவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட நித்யானந்தன், அக்காள் கணவருடன் செல்போனில் பேசுவதை தவிர்க்குமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது.

ஆனாலும் புவனேஸ்வரி தொடர்ந்து செல்போனில் பேசியபடி இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தான் சொல்லியும் கேட்காமல் மீண்டும் புவனேஸ்வரி செல்போனில் பேசியதை கண்டு ஆத்திரம் அடைந்த நித்யானந்தன், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்தும், பலமுறை கத்தியால் சரமாரியாக குத்தியும் கொலை செய்தார்.

பின்னர் தனது மச்சானுக்கு போன் செய்து, ‘உனது தங்கையை கொன்று விட்டேன்’ என்று சொல்லிவிட்டு கிண்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கொலையான புவனேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

புவனேஸ்வரியின் அண்ணனும், நித்யானந்தனும் நண்பர்கள். தனது தங்கையை பெண் கேட்டதால் நண்பருக்கு கட்டி வைத்துள்ளார். இருப்பினும் 7 மாத திருமண வாழ்க்கை, மனைவியின் மீது கணவருக்கு ஏற்பட்ட சந்தேக பார்வையால் கொலையில் முடிந்தது.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கிண்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நித்தியானந்தனிடம் விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!