‘சாயி சாயி’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்க..!

ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப் போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும். சாயி நாமம் நம்முள் எப்போதும் எதிரொலித்துக் கொண்டிருக்க நாம் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும்.

அதாவது இறைவனின் நாமத்தை நம் மூச்சுடன், நாம் உணராவிட்டாலும் கூட, நமக்குள் தொடர்ச்சியாகவும் இயல்பாகவும் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சுவிடுவதற்கு நாம் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அது தன்பாட்டிற்கு ஒரு சீரான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

அது போல சாயின் நாமத்தை நாமும் நம்பிக்கையோடு மனதுக்குள் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். இறைவனின் நாமத்தை சுவாசத்துடன் இணைக்கும் போது அது மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. நம்மால் முடிந்த போதெல்லாம் ஒவ்வொரு மூச்சுக்கும் ‘சாயி சாயி’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருப்பது அல்லது நாமத்தை ஜெபிக்காமல் சாயியின் நினைவை மனதில் கொள்வது இவையும் நல்லதே.

மெல்ல மெல்ல நமக்குள், நம்மையறியாமலேயே, உள்ளுக்குள் நிகழும் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக இது மாறிவிடும். ஒவ்வொரு செயலும், எண்ணமும் பாபாவின் நினைவுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.-Source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!