அப்பா வாழ்ந்த இடத்தில் பணப் புதையல் உள்ளது – வீரப்பன் மகள் பரபரப்பு தகவல்!

அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் மட்டுமே அவரது படத்தை போலவே போஸ்டரில் எனது படம் பயன்படுத்தப்பட்டது என வீரப்பன் மகள் கூறியுள்ளார்.

தமிழக காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

வீரப்பனுக்கு திருமணமாகி வித்யாராணி, விஜயலட்சுமி என்ற 2 மகள்கள் உள்ளனர். வித்யாராணி பா.ஜனதாவில் இணைந்த நிலையில் விஜயலட்சுமி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

அத்துடன் மாவீரன் பிள்ளை என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். கே.என்.ஆர் ராஜா தயாரித்து நடித்துள்ள படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில் நேற்று படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது.

அப்போது விஜயலட்சுமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாவீரன் பிள்ளை படம் சாதிய படமாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் படம். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, மதுவிலக்கு, விவசாயிகளின் போராட்டங்கள் போன்றவற்றை படத்தில் கூறியுள்ளோம், அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் மட்டுமே அவரது படத்தை போலவே போஸ்டரில் எனது படம் பயன்படுத்தப்பட்டது. அவரின் வாழ்க்கை கதைக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எனது தந்தை வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மை. அது உயிரிழந்த எனது அப்பாவிற்கும் அப்பாவின் நெருங்கிய நண்பரான கோவிந்தனுக்கும் மட்டுமே தெரியும். இருவருமே இப்போது உயிரோடு இல்லை. ஆனால் நிச்சயம் புதையல் அங்கே இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!