சாயி சர்வசக்தியும் நிறைந்தவரென்பதை அறிந்து கொள்ளுங்கள்..!

எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன் வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில் தான் இருக்க வேண்டும். அப்படியிருக்க, விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்.! இளகிய மனம் படைத்த சாயி பக்தர்களின் எண்ணங்களைக் கண்டு அவர்களுடைய பக்தியை பாராட்டும் வண்ணம் ஒன்றன்பின் ஒன்றாகச் சீரிய அனுபவங்களை அளிக்கிறார். பாபாவின் திருவாய் முலம் உதிர்ந்த கதைகளை கேட்க வேண்டும். ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்கவேண்டும்.

எத்தனை லீலைகளைச் சேகரிக்க முடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சாயியின் அற்புதமான சரித்திரத்தை பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும், துயரங்களும் ஒழிந்துபோகும். எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்து விடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். சாயி சர்வசக்தியும் நிறைந்தவரென்பதை அறிந்து கொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள். எல்லா சித்திகளையும் பெறுவீர்கள்.

எனது நாமத்தை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் சொல்பவர்களின் எல்லா விருப்பங்களையும் நான் நிறைவேற்றுவேன். நிரந்தரமாக செய்யப்படும் என் நாமஜெபம் உங்களை என்னிடம் சேர்க்கிறது. கடவுள் ஒருவர் தான் நம்மை காப்பவர். அவரைத்தவிர வேறு யாரும் இல்லை. அவருடைய எண்ணம் மட்டுமே ஈடேறும். கடவுள் அனைவரிடத்திலும் இருக்கிறார். அவர் நமக்கு கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கடவுள் கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் வாங்கிக் கொள்ளவேண்டும். – Source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!