உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள்!

பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது, அதை எப்படி வளர்த்து கொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார். பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும். உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள், விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள். சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது.

பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள், அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு பலன்களைப் பெறுகிறார்கள். பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை. அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள். அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று, முற்பிறவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார். ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது? அவர்கள் பாபாவை அணுகவேண்டும் என மனப்பூர்வமாக விரும்பட்டும்.

உடனே அணுகுமுறை துவங்கிவிட்டது. அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர், மேன்மேலும் பலன் அடைகின்றனர். முதலில் ஒரு வித நன்றியுணர்வையும், நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகிறார்கள். பக்தர்கள் பாபாவின் திருவுருவை தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள், படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து, பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டு வரட்டும், கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை படிக்கட்டும். பாபாவின் குணாதிசயங்களை நினைவுபெற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி மிக சக்தி வாய்ந்த சாதனம். ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும். ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார். – Source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!