பள்ளிக்கரணை அருகே குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கரணையை அடுத்த பெரும்பாக்கம் நூக்கம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் ஷிரஷா. சாப்ட்வேர் என்ஜினீயர்.
அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜிகானா (வயது 35). இவர்களது 2½ வயதில் பரி, 5 மாத கைக்குழந்தை ஷரியா ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
ஷிரஷா – ஜிகானா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஷிரஷா கடந்த ஒரு மாதமாக வீட்டிற்கு வரவில்லை என தெரிகிறது. ஜிகானா, 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
கணவர் பிரிந்து சென்ற வேதனையில் இருந்த அவர் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்று இரவு நீண்ட நேரமாகியும் ஜிகானா வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.
மின் விளக்குகள் எரிந்தபடி இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று ஜன்னல் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ஜிகானா பிணமாக கிடந்தார்.
அருகில், அவரது 2 குழந்தைகளும் இறந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கணவர் பிரிந்து சென்ற ஏக்கத்தில் ஜிகானா 2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்றிருப்பதும், பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.
3 பேரின் உடல்களுடன் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனைவி மற்றும் குழந்தைகள் இறந்தது குறித்து ஷிரஷாவுக்கு போலீசாரால் தகவல் தெரிவிக்க முடியவில்லை.
அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட் டுள்ளது. அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. – Source: maalaimalar.
வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05