தன் குழந்தைகள் அனாதையாகி விடக்கூடாது எனக் கருதி பெண்ணொருவர் செய்த செயல்…!


சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சித்தூரை அடுத்துள்ள ஒருவாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 30). இவருடைய மனைவி பழனியம்மாள் (24).

இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சந்துரு(7) என்ற மகனும், ஸ்ரீஜா (5) என்ற மகளும் இருந்தனர்.

கணவன்-மனைவி இருவரும் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு ஊர், ஊராக சென்று வந்துள்ளனர். இதனால் இவர்களின் குழந்தைகள் இருவரையும் கரட்டுக்காட்டில் உள்ள பழனியம்மாளின் தாயார் பெருமாயி வளர்த்து வந்துள்ளார்.

இதில் சந்துரு ஒருவாப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பும், சிறுமி ஸ்ரீஜா அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திலும் படித்து வந்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி கணவன், மனைவி இருவரும் கரும்பு வெட்ட திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர்.

சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. நேற்று காலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

இதையடுத்து ராஜி மனைவியுடன் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். வீட்டில் தனியாக இருந்த பழனியம்மாள் மனவேதனை அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து அவர்களின் இரு குழந்தைகளும் வீட்டுக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே மனம் உடைந்து காணப்பட்டிருந்த பழனியம்மாள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

மேலும் தான் இறந்த பிறகு குழந்தைகள் அனாதையாகி விடக்கூடாதே என்று கருதிய அவர், தனது குழந்தைகளையும் கொலை செய்து விட முடிவு செய்தார். உடனே வீட்டை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டார்.

பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். அதில் இருந்த மண்எண்ணெயை தனது குழந்தைகள் இருவர் மீதும், தனது உடலிலும் பழனியம்மாள் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் 3 பேரின் உடலிலும் தீப்பற்றி எரிந்தது. வலிதாங்க முடியாமல் அவர்கள் அலறினர். இதனிடையே அவர்கள் வீட்டின் சிமெண்டு மேற்கூரையில் இருந்து கரும்புகை வருவதை பார்த்த ராஜியின் பாட்டி வேம்பத்தாள் உடனடியாக அக்கம்பக்கத்தினருடன் அங்கு சென்றார்.

அப்போது தீயில் கருகி அலறும் சத்தம் கேட்டு, கதவை தட்டினர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததை அறிந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பழனியம்மாள், தனது 2 குழந்தைகளுடன் தீயில் கருகி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க போராடினர்.

இருப்பினும் பழனியம்மாளும், ஸ்ரீஜாவும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். அதே நேரத்தில் தீயில் கருகி உயிருக்கு போராடிய சந்துரு உடனடியாக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.

அங்கு சிறுவனும் சிகிச்சை பலனின்றி இறந்தான். இது குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீயில் இறந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைத்தனர்.

அங்கு அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. மேலும் சம்பவ இடத்திற்கு சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

குடும்ப தகராறில் மனம் உடைந்த தாய், தனது 2 குழந்தைகளை கொன்று, தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. – Source: dailythanthi.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05