மூளைச்சாவு: இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை கவலைக்கிடம்!

ஷியாம், அருண்விஜய் நடிப்பில் வெளியான இயற்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். இதைத்தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அவர் அடுத்ததாக இயக்கி உள்ள படம் லாபம். விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் நேற்று மதியம் வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வராததால் உதவியாளர்கள் அவரது வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் அவர் சுயநினைவின்றி மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவரது உதவியாளர்கள், அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.