சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த். எலக்ட்ரீசியன் வேலை செய்யும் இவர் தனது மனைவி ஜெபசெல்வி மற்றும் 3 வயது நிரம்பிய சாய்சரண் என்ற மகனுடன் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில், விஜயகாந்த் வேலைக்காக திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் ஜெபசெல்வி, தனது குழந்தை சாய்சரனுடன் தனியாக இருந்துள்ளார். இந்தநிலையில், நேற்று மதியம் ஜெபசெல்வி வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சாய்சரண், திடீரென காணாமல் போயுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெபசெல்வி, பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
தனது குழந்தை காணாமல் போனதால் ஜெபசெல்வி கதறி அழுதுள்ளார். அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் குழந்தை சாய்சரண், விழுந்து கிடந்துள்ளான். இதனையடுத்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.- source: spark
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!