தோழியை கொன்று கழிவுநீர் ஓடையில் வீசிய கொடூர நண்பன் – ஆந்திராவில் பரபரப்பு


ஆந்திர மாநிலத்தில் தன்னை விட்டு விலகிய சககல்லூரி தோழியை மாணவர் கழுத்தை நெரித்துக்கொன்று கழிவுநீர் ஓடையில் வீசி சென்றுள்ளார். பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் கோட அனுஷா (19) . நரசராவ்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் அனுஷாவுடன் படித்து வந்தவர் விஷ்ணு வர்த்தன் ரெட்டி (19). இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக நட்பாக பழகி வந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அனுஷா, விஷ்ணுவை கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் புதன்கிழமை மதியம் கல்லூரி முடிந்தவுடன் விஷ்ணு, அனுஷாவை வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். போகும் வழியில் ஏன் என்னை விட்டு விலகி செல்கிறாய் என்று விஷ்ணு அனுஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த விஷ்ணு, அனுஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் கொலை வெளியில் தெரியாமல் இருக்க, சடலத்தை அருகில் இருந்த கழிவு நீர் ஓடையில் வீசியுள்ளார். சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள், கொலைக் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அனுஷாவின் சடலத்தைத் துாக்கிக் கொண்டு சாலையில் வைத்து மறியலிலும் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்

அனுஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், குடியிருப்பதற்கு அரசு சார்பில் ஒரு வீடும் கொடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ஆர் .ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அத்துடன் கொலை குற்றவாளி மீது விரைவாக விசாரணை நடத்தப்பட்டு தண்டணை பெற்றுத் தரப்படும் என்று முதல்வர் உத்தரவாதம் அளித்து உள்ளார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!