அயோத்தி ராமர் கோவில் கட்ட நிதி வசூலித்த நபருக்கு குடும்பத்தினர் கண் முன்னால் நடந்த கொடூரம்!


அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்காக டெல்லியில் நன்கொடை வசூலித்து வந்த பஜ்ரங் தளம் தொண்டர் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் வசித்து வந்தவர் ரிங்கு சர்மா (வயது 26). பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இவர், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்காக நன்கொடை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு அவரது வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல், அவரை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரிங்கு சர்மா, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இந்த கொடூர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது மதரீதியிலான மோதலில் நடந்த கொலை என தகவல் பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கடந்த மாதம் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. அப்போதும் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்குள்ள சிலர் தலையிட்டு பிரச்சனையை முடித்து வைத்துள்ளனர்.

அதேசமயம், மதரீதியில் நடந்த கொலை என்ற தகவலை காவல்துறை மறுத்துள்ளது. ஏற்கனவே, பிறந்தநாள் விழாவில் பங்கேற்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை கூறி உள்ளது. உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!