உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் சரணடைந்த இளைஞரின் மனைவி திடீர் மரணம்!


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் சரணடைந்தவரின் மனைவி மரணமடைந்தார்.

ஏரல் அருகே உள்ள தீப்பாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபாலின் மகன் முருகவேல் (39). இவர் கடந்த 31-ஆம் தேதி இரவு ஒரு ஹோட்டலில் வெஜிடபிள் பிரைடு ரைஸ் கேட்டு மதுபோதையில் தகராறு செய்தார்.

தகவலறிந்த காவல் உதவி ஆய்வாளர் பாலு (55) சம்பவ இடத்திற்கு வந்து முருகவேலை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த முருகவேல், எஸ்ஐ பாலு மற்றும் தலைமைக் காவலர் பொன் சுப்பையா ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேனை ஓட்டி வந்து மோதினார்.

இதில் எஸ் ஐ பாலு உயிரிழந்தார். இதையடுத்து விளாத்திகுளம் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் முருகவேல் சரணடைந்தார். பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ஏறகெனவே முருகவேல் மதுபானம் அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்ததால் அவரது மனைவி செல்வலட்சுமி கடந்த 30ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ஏரல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அண்மையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

வீட்டில் இருந்த செல்வலட்சுமிக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2-ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இவர்களுக்கு 7 வயதில் மகனும் 3 வயதில் மகளும் உள்ளனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!