ஒலேநரசிப்புரா தாலுகாவில், கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்று உடலை ஏரியில் வீசிச்சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவியின் காதலன் உள்பட 2 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
கல்லூரி மாணவியுடன் காதல்
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா கெரேகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ்(வயது 24). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய ஒரு பி.யூ. கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். அந்த மாணவியும், யோகேசை காதலித்து வந்தார். இதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் யோகேஷ் பலமுறை உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதனால் அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி யோகேசிடம் கேட்டு வலியுறுத்தி உள்ளார்.
உல்லாசம் அனுபவித்தார்
ஆனால் அந்த மாணவியை திருமணம் செய்ய யோகேஷ் மறுத்துவிட்டார். இதையடுத்து இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அன்று இரவு யோகேஷ், தனது காதலியான கல்லூரி மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நாம் இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி பெங்களூருவுக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். அவர் கூறியதை நம்பிய அந்த கல்லூரி மாணவி வீட்டைவிட்டு வெளியேறி யோகேசை சந்தித்துள்ளார்.
அப்போது யோகேசும், அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து அந்த கல்லூரி மாணவியை அங்கவள்ளி கிராமம் அருகே உள்ள ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அந்த மாணவியிடம் யோகேஷ் உல்லாசம் அனுபவித்துள்ளார்.
கற்பழிப்பு
பின்னர் அவர் தனது காதலியை தன்னுடைய நண்பனுக்கு விருந்தாக்கினார். அதற்கு அந்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் யோகேசும், அவரது நண்பரும் சேர்ந்தும் அந்த மாணவியை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த மாணவியை கற்பழித்துள்ளனர்.
இதனால் அந்த மாணவி கதறி அழுது துடித்தார். அப்போது ஆத்திரம் அடைந்த யோகேசும், அவரது நண்பரும் சேர்ந்து அந்த மாணவியை அடித்து, உதைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
பின்னர் உடலை ஏரியில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் இன்று காலையில் அந்த மாணவியை அவருடைய பெற்றோர் தேடினர்.
ஏரியில் வீசிவிட்டு…
அப்போது அங்கவள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் மாணவி பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஒலேநரசிப்புரா புறநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவியை அவருடைய காதலன் யோகேசும், அவரது நண்பரும் சேர்ந்து கற்பழித்து கொலை செய்து உடலை ஏரியில் வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டது தெரியவந்தது.
8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இதையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். அதாவது யோகேஷ் மற்றும் அவரது நண்பர் மீது போக்சோ மற்றும் கொலை செய்தல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!