சாயியின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள்..!


ஸ்ரீ சாயிபாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரே நம் அன்னையும் தந்தையும் ! அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை. கூவி அழைக்கும்போது ஓடிவந்து அணைத்துக்கொள்வாள்; தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிவாள். உங்களுடைய கொடிய வியாதியையும் வழியையும் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது. எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். போய் சாயியின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள். யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்து விடுகிறார். இது அவருடைய உறுதிமொழி. இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே துரிதமாகச் சென்று சாயி தரிசனம் செய்யவும்.

பூனாவில் வாழ்ந்த கோபால் ஆம்ப்டேகர் நாராயண் என்ற பக்தர், பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் கலால் வரி இலாக்காவில் 10 ஆண்டு வேலை பார்த்த பிறகு அந்த வேலையை விட்டு விட்டார். அதன் பிறகு கஷ்ட காலம் ஆரம்பித்தது. துன்பத்திற்கு மேல் துன்பம் நேரவே, எல்லா விதத்திலும் சோர்வடைந்து விட்டார். நிதி நிலைமை மோசமானது. ஆபத்துகள் வரிசையாக வந்தன. குடும்ப நிலைமை சகிக்க முடியாமல் ஏழு வருடம் திண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் ஷிர்டி சென்று பாபாவை இரவு, பகலாக வணங்கி அழுதார். துன்பத்தை தாங்க முடியாமல் ஒருநாள் ஷிர்டி கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்து விட முடிவு செய்து கொண்டு ஒரு மாட்டு வண்டி மீது உட்கார்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சகுண் மேரு நாயக் என்ற பாபாவின் பக்தர் ஒருவர், தன் வீட்டருகே கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் ஆம்ப்டேகரை கவனித்து, அவரிடம் வந்து அக்கல்கோட் மகாராஜ் பற்றிய புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்கச் சொன்னார். அதை வாங்கிய ஆம்ப்டேகர் அந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை புரட்டினார். அக்கல்கோட் மகராஜின் பக்தர் ஒருவர், வியாதியை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயச்சித்த சம்பவம் அந்த புத்தகத்தில் அவர் படித்த பக்கத்தில் இருந்தது. அந்த பக்தர் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற போது அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரை காப்பாற்றி, தற்கொலையின் தீங்கு பற்றி உபதேசம்செய்தார் .


‘எதை அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதை அனுபவித்தே தீரவேண்டும். பூர்வ ஜென்மத்தின் வினைகளை வியாதியாகவும், குஷ்டமாகவும், வலி, கவலையாகவும் முழுவதும் அனுபவித்து தீர்க்கும் வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்? துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்து தீர்க்காவிட்டால் அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கவேண்டும். ஆகவே, இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே!’ என்று உபதேசித்தார்.

இந்த செய்தியை படித்த ஆம்ப்டேகர் மனம் மாறி, தன் செயலுக்கு வருந்தினார். சமயத்தில் தகவலை அனுப்பி காப்பாற்றிய பாபாவுக்கு நன்றி சொன்னார்.
பக்தர்களின் நலம் கருதி பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று அவர் பக்தர்கள் வம்சம் விருத்தியாக அருளியது. ஏதாவது ஒரு பக்தைக்கு பிள்ளைப் பேறு உண்டாகும் என் பாபா ஆசி வழங்கினால், அனேகமாக அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் பாபாவின் வாக்கின்படி அப்பெண்மணி ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை பெறுவது உறுதி. ஜாதகத்தின் படி புத்திர ஸ்தானத்தில் பாவகிரகம் இருப்பதால் இப்பிறவியில் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை என சோதிடர்கள் கூறியும், பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம். ஊழ்வினையின் நியதிகளை மாற்றி பாபா இன்றும் தனது பக்தர்களுக்கு குழந்தை செல்வம் அளித்து வருகிறார்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!