பாபா எல்லா இடத்திலும் நிறைந்து இருப்பவர்…!


‘எனது பக்தன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அவன் மூவாயிரம் மைல்களுக்கு தொலைவில் இருந்தாலும் காலில் நூல் கட்டி உள்ள சிட்டுக்குருவியை இழுப்பது போல அவன் சீரடிக்கு இழுக்கப்படுவான்’ – சீரடி சாய்பாபா.

சீரடி சாய்பாபா தனது பக்தர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் விதமே அலாதியானது.அவர் ஆட்கொள்ள விரும்பும் பக்தர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தன்னை நோக்கி வரவழைத்து விடுவார்.சில பக்தர்களை அவர் நேரில் காட்சிக் கொடுத்தும்,சில பக்தர்களை அவர் கனவில் தோன்றி தீட்சை அளித்தும் சீரடிக்கு வரவைப்பார். சர்வ வியாபியான அவர் பார்வையில் இருந்து எந்த ஒரு பக்தனும் தப்ப இயலாது.

மும்பையைச் சேர்ந்த லாலா லட்சுமிசந்த் என்ற பக்தரை சீரடி சாய்பாபா எப்படித்தான் ஆட்கொண்டார் என்பதைப் பார்ப்போம்.1910-ம் ஆண்டு தான் லாலா லட்சுமிசந்த்க்கு சாய்பாபா தம்மைப் பற்றி தெரிய வைத்தார். அதற்கு முன்பு சாய்பாபா பற்றி லட்சுமிசந்த் கேள்விப்பட்டிருந்தாலும், அவரை நேரிலோ, புகைப்படத்திலோ பார்த்தது இல்லை. மும்பையில் ரெயில்வேயிலும், ராலி பிரதர்ஸ் நிறுவனத்திலும் குமாஸ்தாவாக பணியாற்றிய அவர் 1910-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாந்தக் குருசில் தங்கி இருந்தார். அன்றிரவு ஒரு வயதானவர் தாடியுடன் அவர் கனவில் தோன்றினார்.

அவரைச் சுற்றி நிறைய பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். அதிகாலையில் இந்த கனவைக் கண்ட லட்சுமிசந்த், அந்த வயதானவர் யார் என்று தெரியாமல் குழம்பினார். அதற்கான விடை அவருக்கு அடுத்த வாரமே தெரிந்தது. சாய்பாபாவின் முதன்மைப் பக்தர்களில் ஒருவரான தாஸ்கணு மும்பையில் அந்த வாரம் பாபா பற்றிய கீர்த்தனை மற்றும் சொற்பொழிவு நடத்தினார். அந்த கீர்த்தனைக்கு லட்சுமிசந்த்தும் அழைக்கப்பட்டிருந்தார்.


கீர்த்தனை நடந்த இடத்தில் சீரடி சாய்பாபாவின் பெரிய படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்தைப் பார்த்ததும் லட்சுமிசந்த்துக்கு ஆச்சரியம் தாங்க இயலவில்லை. தன் கனவில் வந்தது இவர்தான் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார். அந்த மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு தாஸ்கணு நடத்திய சொற்பொழிவு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சீரடி சாய்பாபாவின் சிறப்புகளையும், மகிமைகளையும் தாஸ்கணு சொல்ல, சொல்ல லட்சுமிசந்த்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. உடனே சீரடிக்கு செல்ல வேண்டும். சாய்பாபாவை நேரில் பார்த்து அவர் கால்களில் விழுந்து ஆசி வாங்க வேண்டும் என்று துடித்தார். எப்படியாவது சீரடிக்கு போய் விட வேண்டும் என்று மனதுக்குள் உறுதி செய்து கொண்டார். தனியாக செல்வதை விட யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தார்.

அடுத்த வினாடி அவருக்கு அவரது நண்பர் சங்கர்ராவ் நினைவு வந்தது. இரவு 8 மணிக்கு சங்கர்ராவ் வீட்டுக் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த சங்கர்ராவ் நலம் விசாரித்து விட்டு ‘என்ன விஷயமாக பார்க்க வந்திருக்கிறாய்?’ என்று கேட்டார். அதற்கு லட்சுமிசந்த் ‘சீரடிக்கு சென்று சாய்பாபாவை பார்க்கலாம் என்று ஆசையாக உள்ளது. நீயும் என்னுடன் சீரடிக்கு வருகிறாயா?’ என்றார்.

இதைக் கேட்டதும் சங்கர்ராவுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ‘நானும் சீரடிக்கு போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை வா… நாளைக்கேப் புறப்படலாம்’ என்றார். பொதுவாக சீரடிக்கு செல்ல வேண்டும் என்று எந்த ஒரு பக்தன் உள்ளன்போடு உண்மையாக விரும்புகிறானோ… அவனது ஆன்மிக முயற்சிக்கு பாபாவே யாரையாவது ஒருவரை துணைக்கு அனுப்பி உதவிகள் செய்ய வைத்து விடுவார் என்று சொல்வார்கள். லட்சுமிசந்த், சங்கர்ராவ் இருவரது வாழ்விலும் அது மிகச் சரியாக நடந்தது.

மறுநாள் லட்சுமிசந்த் தன் மாமாவிடம் 15 ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு சீரடிக்குப் புறப்பட்டார்.
கோபர்கான் ரெயில் நிலையத்தில் இருவரும் இறங்கினார்கள். கோபர்கானில் பாபாவுக்கு பழ வகைகள் வாங்கிச் செல்ல வேண்டும் என்று லட்சுமிசந்த் நினைத்திருந்தார்.

ஆனால் ரெயிலில் மற்றவர்களிடம் பேசிக் கொண்டே வந்த காரணத்தால் பழ வகைகள் வாங்குவதற்கு எப்படியோ மறந்து விட்டார். சீரடி அருகில் வந்த பிறகுதான் பாபாவுக்கு சமர்ப்பிக்க பழ வகைகள் வாங்கவில்லையே என்பது லட்சுமிசந்த்துக்கு நினைவுக்கு வந்தது. பழம் வாங்க முடியாமல் போய் விட்டதே என்று அவர் மனம் மிகவும் வேதனைப்பட்டது. அடுத்த வினாடி ஒரு கிழவி கூடை நிறைய பழ வகைகளை எடுத்துக் கொண்டு கூவி, கூவி விற்றபடி வந்தாள்.

அவளைப் பார்த்ததும் லட்சுமிசந்த் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘அம்மா… இங்கே வாருங்கள்’ என்று கூறியபடி வண்டியில் இருந்து இறங்கினார்.

‘சாய்பாபாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். நல்ல பழமாக எடுத்துத் தாருங்கள்’ என்று கேட்டார். அந்த மூதாட்டி மகிழ்ச்சியில் சிரித்தாள். ‘பாபாவுக்காக… இதோ நல்ல பழங்களாகத் தருகிறேன்’ என்று எடுத்துக் கொடுத்தாள். பிறகு மீதம் இருந்த அனைத்து பழங்களையும் எடுத்துக் கொடுத்த அந்த மூதாட்டி, ‘இந்த பழங்களை என் சார்பில் பாபாவிடம் கொடுத்து விடுங்கள்’ என்றாள்.

பிறகு பழத்துக்குரிய பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டாள். லட்சுமிசந்த்துக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நடப்பதெல்லாம் கனவா என்று தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். பழம் வாங்க வேண்டும் என்று விரும்பிய மறுவினாடி பழக்காரி வந்தது எப்படி என்று லட்சுமிசந்த் மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது. அடுத்த சில நிமிடங்களில் லட்சுமிசந்த்தும், சங்கர்ராவும் சீரடி வந்து சேர்ந்தனர்.சாய்பாபாவை நேரில் கண்டதும் லட்சுமிசந்த், சங்கர்ராவ் இருவரும் தங்களையே மறந்தனர்.

லட்சுமிசந்த் உணர்ச்சிப் பிழம்பாக நின்றார். பாபாவை உரிய முறையில் வணங்கினார். பாபாவின் காலடியில் விழுந்து, ‘நீங்களே என்னை ஆட் கொள்ள வேண்டும்’ என்று சரண் அடைந்து கண்ணீர் விட்டார். அவரையே சாய்பாபா உற்றுப் பார்த்தார். பிறகு அவர் சிரித்தப்படியே லட்சுமிசந்த்தைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

‘என்னைப் பார்ப்பதற்கு நீ கடன் வாங்கிக் கொண்டு வர வேண்டுமா? என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நீ கடன் வாங்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை. சரி இப்போது உனக்கு சந்தோஷமா? உன் ஆசைகள் பூர்த்தி ஆகி விட்டதா? என் மீது உனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டது. அதனால்தான் ரெயிலில் வரும்போது மற்ற பயணிகளிடம் என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தாயே…? நீ ஏன் அவ்வாறு என்னைப் பற்றி விசாரித்தாய்?

எப்போதுமே நாம் நமது கண்களாலேயே எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். அப்போது உனக்கு எல்லாம் புரிந்து விடும். முதலில் உனக்கு வந்த கனவு உண்மையா? பொய்யா என்று நினைத்துப் பார். அதன் பிறகு என் கீர்த்தனைகள் உனக்கு எல்லாவற்றையும் சொல்லி இருக்குமே. இப்போது உன் சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்து விட்டதா?’

சாய்பாபா இவ்வாறு பேச, பேச லட்சுமி சந்த் அதிர்ச்சியில் வாய் பேச முடியாமல் உறைந்து போய் நின்றார். மும்பையில் புறப்பட்டது முதல் சீரடி வந்து சேர்ந்தது வரை அத்தனையையும் பாபா புட்டுப் புட்டு வைக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார்.

பாபா எல்லா இடத்திலும் நிறைந்து இருப்பவர் என்பதை லட்சுமிசந்த் அனுபவப்பூர்வமாக உணர்ந்தார்.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!