ஆர்.டி.ஓ. விசாரணை இன்று தொடங்குகிறது…. சித்ராவின் மரணத்தின் விடை கிடைக்குமா..?


டி.வி. நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஆம்புலன்சு ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை நடத்திய நிலையில், ஆர்.டி.ஓ. விசாரணை இன்று தொடங்குகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் டி.வி.நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவு குறித்து போலீஸ் விசாரணை நடந்த நிலையில், பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இந்தநிலையில், சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரிடம் 4 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் தாய் விஜயா ஆகியோர் அளித்த அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே 5-வது நாளாக நேற்று அவரிடம் நசரத்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடமும் போலீசார் விசாரணை செய்தனர்.

அதைத்தொடர்ந்து, சித்ரா உடலை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று(திங்கட்கிழமை) ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்க உள்ளார். முதற்கட்டமாக, நடிகை சித்ராவின் பெற்றோரிடம், அதனைத் தொடர்ந்து ஹேம்நாத்தின் பெற்றோரிடமும் விசாரணையை தொடங்க உள்ளதாக தெரிகிறது.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரிடமும் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறும் என்றும் தெரிகிறது. விசாரணையின் முடிவில், இந்த வழக்கில் மாறுபட்ட தகவல்கள் வெளியானால் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், அதுவரை ஹேம்நாத்திடம் விசாரணை தொடரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!