பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் மேல் வழக்கு போட்ட இளையராஜா..!


பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதன் மூலம் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் ரூ.50 லடசம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ஸ்டூடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது எனவும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!