ஓடும் ரெயிலில் இறங்க முயற்சி… மத்திய ஆயுதப்படை போலீஸ்காரருக்கு நடந்த சோகம்..!


ரெயிலில் இருந்து தவறி விழுந்து மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் பலியானார்.

ஒடிசாவை சேர்ந்தவர் பாரத் சந்திர பெகரா (வயது 37). இவர் கோவை தொப்பம்பட்டியில் உள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் (சி.ஆர்.பி.எப்.) முகாமில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 15 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான ஒடிசாவிற்கு சென்றார்.

பின்னர் விடுமுறை முடிந்து நேற்று பணியில் சேர்வதற்காக கோவை திரும்பினார். அதற்காக ஒடிசாவில் இருந்து காட்பாடிக்கு ரெயிலில் வந்தார். அங்கிருந்து கோவை சிறப்பு ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார்.

அவர் வந்த ரெயில் வடகோவை அருகே வந்தது. அப்போது அவர் இறங்குவதற்காக தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு கதவு அருகே வந்து நின்றார். வடகோவை ரெயில் நிலையம் வந்ததும், ரெயில் நிற்பதற்கு முன்பு இறங்க முயற்சி செய்து உள்ளார். இதில் பாரத் சந்திர பெகரா தவறி விழுந்து ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே மாட்டிக்கொண்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!