கூரையைப் பிய்த்துக்கொண்டு விழுந்த அதிர்ஷ்டம்… ஒரே இரவில் கோடீஸ்வரனான நபர்..!


இந்தோனேஷியாவை சேர்ந்த 33 வயதான ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார். அவருக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டம் வானிலிருந்து கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியுள்ளது.

ஆம்!! சுமார் ரூ .10 கோடி மதிப்புள்ள ஒரு விண்கல் அவரது வீட்டின் தகரத்தால் ஆன கூரை வழியாக அவர் வீட்டிற்குள் விழுந்தது.

ஜோசுவா ஹுடகலுங் என்ற அந்த நபர் சவப்பெட்டி செய்யும் தொழிலை செய்து வருகிறார். அவர் ஒரு சவப்பெட்டி செய்து கொண்டிருந்தபோது, இந்த விண்கல் வீட்டில் வந்து விழுந்தது. ​​வடக்கு சுமத்ராவின் (Sumatra) கோலாங்கில் உள்ள அவரது வீட்டில் விண்கல் விழுந்தது.

2.1 கிலோ எடையுள்ள விண்வெளி பாறை கூரை வழியாக விழுந்த வேகத்தில் மண்ணில் 15 செ.மீ ஆழத்தில் புதைந்தது.

விண்கற்களின் (Meteorite) விலை அவற்றின் எடையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மையான-பாறை வகைகள் ஒரு கிராமுக்கு 0.50 டாலர் முதல் 5.00 டாலர் வரை இருக்கும். பூமியில் காணப்படாத உலோகங்களைக் கொண்ட அரிய விண்கற்கள் கிராமுக்கு $ 1,000 வரை கூட விற்பனை செய்யப்படுவதுண்டு.

தன் வீட்டில் வந்து விழுந்த அந்த விண்கல்லை எடுக்க ஜோசுவா முற்பட்ட போது, அது சூடாக இருந்ததாகவும், ஓரளவு உடைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த விண்கல் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது CM1 / 2 கார்பனேசிய சோண்ட்ரைட் என வகைப்படுத்தப்படுகிறது. இது மிகவும் அரிதான வகையாகும். இந்த வகையான விண்வெளி பாறையின் விலை சுமார் 1.85 மில்லியன் டாலர், அதாவது ஒரு கிராமுக்கு 857 டாலர் ஆகும்.

“நான் அதைத் தூக்கியபோது, ​​கல் சூடாகத்தான் இருந்தது, அதை வீட்டிற்குள் கொண்டு வந்தேன். அது விழுந்த சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. என் வீட்டின் சில பகுதிகளும் நடுங்கிக்கொண்டிருந்தன. பின்னர்தான் என் வீட்டின் தகர கூரை உடைந்திருப்பதைக் கண்டேன். இந்த பாறை கண்டிப்பாக வானத்திலிருந்து தான் விழுந்துள்ளது. பலர் மெடரோய்ட் என அழைக்கும் ஒரு விண்கல்தான் இது. யாரோ ஒருவர் வேண்டுமென்றே அதை மேலே இருந்து எறிவதோ இறக்கிவிடுவதோ சாத்தியமில்லை” என்று அவர் கொம்பாஸிடம் கூறினார்.

விண்வெளி பாறைக்கு பதிலாக யோசுவாவின் 30 ஆண்டுகால ஊதியத்துக்கு நிகரான தொகை அவருக்கு வழங்கப்பட்டதாக சன் தெரிவித்துள்ளது. இதில் சிறு தொகையை ஒரு தேவாலயத்தை கட்ட பயன்படுத்துவேன் என்று யோசுவா கூறினார்.

“எனக்கு எப்போதுமே ஒரு மகள் பிறக்கவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. மகள் பிறப்பதற்கான ஒரு அதிர்ஷ்டமான அறிகுறியாக நான் இதை கருதுகிறேன்” என்று அவர் தி சன் பத்திரிகையிடம் தெரிவித்தார்.- source: zee.news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!