டோனி மீதான மோகத்தால் ரசிகர் ஒருவர் இப்படி செய்தாரா..?


எம்எஸ் டோனி மீதான மோகத்தால் தனது வீட்டையே மஞ்சள் கலராக மாற்றி, ‘ஹோம் ஆப் டோனி’ என எழுதியுள்ளார் அரங்கூர் கிராம ரசிகர்.

கிரிக்கெட் மற்றும் சினிமா மீது கொண்டுள்ள அதிக மோகத்தால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்கள், நடிகர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் பொறித்த சட்டைகள், டீ-சர்ட்டுகள் அணிந்து வலம் வருவதை பார்த்திருப்பீர்கள்.

சிலர் தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை உடலில் பச்சை குத்தியிருப்பதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரருக்காக, ரசிகர் ஒருவர் தனது வீட்டையே வர்ணம் தீட்டி மாற்றியுள்ளதை பார்த்திருக்கிறீர்களா?,
ஆம் அது போன்ற ஒரு ருசிகர சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி- விஜயா தம்பதியரின் மகன் கோபிகிருஷ்ணன். இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளார். டோனியின் தீவிர ரசிகரான இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்றார்.

வெளிநாடு சென்றாலும் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் துளிக்கூட குறையவில்லை.

கோபிகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதால், டோனிக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்தார். அதன்படி தனது வீட்டை டோனி கேப்டனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அணியும் ஆடை நிறத்திலும், அதில் டோனியின் படத்தையும் வரைய முடிவு செய்தார். இதையடுத்து கோபிகிருஷ்ணன், ரூ.1½ லட்சம் செலவில் தனது வீடு முழுவதும் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசி, வீட்டின் முன்புறம் டோனி படமும், பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் வரைந்து, ‘ஹோம் ஆப் டோனி’ என எழுதியுள்ளார்.

கிரிக்கெட் வீரருக்காக தனது வீட்டையே மாற்றியுள்ள ரசிகரையும், அவர் வரைந்துள்ள தோனி மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் சுற்று வட்டார கிராம மக்கள் வந்து பார்த்து விட்டு, கோபிகிருஷ்ணனை பாராட்டி செல்கின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!