அணிலின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை லாவகமாக அகற்றிய தொழிலாளி..!


திருவாரூர் அருகே அணிலின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை தொழிலாளி லாவகமாக அகற்றினார். உடனே அணில் அங்கிருந்து துள்ளி குதித்து ஓடியது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பெருமாள் கோவில் அருகே ஒரு அணில் தன் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவுடன் அங்கும், இங்கும் வலியுடன் அலைந்து கொண்டிருந்தது.

இதைக்கண்ட முருகானந்தம் அணிலை பிடித்து அதன் தலையில் சிக்கிய டப்பாவை அகற்ற முயன்றார். ஆனால் அணில் அங்கும், இங்கும் அலைந்துகொண்டு இருந்ததால் அதை பிடிக்க முடியவில்லை. அப்போது அந்த வழியாக சென்ற சிலரின் உதவியுடன் முருகானந்தம் அணிலை பிடித்தார்.

இதைத்தொடர்ந்து அணிலின் தலையில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் டப்பாவை லாவகமாக அகற்றினார். பின்னர் மயக்க நிலையில் இருந்த அணிலுக்கு தண்ணீர் கொடுத்து அதன் மயக்கத்தை தெளியவைத்தார். உடனே அணில் அங்கிருந்து துள்ளி குதித்து ஓடியது. மனிதநேயத்துடன் அணிலின் உயிரை காப்பாற்றிய முருகானந்தத்தை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!