சென்னை சூளைமேட்டில் வீட்டு வாடகை தகராறில், பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். காப்பாற்றப்போன அவரது கணவரும், மாமனாரும் தாக்கப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சூளைமேடு, ராதாகிருஷ்ணன் நகர், 2-வது தெருவில் வசிப்பவர் சதீஷ் (வயது 35). இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் மெக்கானிக் தொழில் செய்யும் இவர் சொந்த வீட்டில், மனைவி சுகன்யா (28) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது தந்தை சந்திரமோகனும் (69) அதே வீட்டில் இருக்கிறார்.
இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் நாராயணன் (55) என்ற பெயிண்டர், கடந்த 20 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருக்கிறார். மாதம் ரூ.2,800 வாடகை கொடுத்து வந்தார். கொரோனா நோய் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக நாராயணன் வீட்டு வாடகையை கொடுக்க வில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், நாராயணன் வருவாய் இல்லாமல் அவதி பட்டதால், வீட்டுக்காரர் சதீஷ் ரூ.80 ஆயிரம் வரை கடன் கொடுத்தும் உதவி உள்ளார். இந்த சூழலில்தான் விதி விளையாடியது. நாராயணனின் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.
கடும் மன உளைச்சலுடன் காணப்பட்ட நாராயணன் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். தினமும் குடிபோதையில் வந்ததால், சதீஷ் அவரை கண்டித்துள்ளார். குடிப்பதற்கு மட்டும் பணம் இருக்கிறது அல்லவா? எனவே வீட்டு வாடகையையும், கடனையும் திருப்பி தாருங்கள் என்று நாராயணனிடம் சதீஷ் கேட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இதையொட்டி அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. திடீரென்று நாராயணன் சமையலறையில் கிடந்த கத்தியை எடுத்து வந்து சதீசை குத்த முயற்சித்துள்ளார். இதை சுகன்யாவும், சந்திரமோகனும் தடுத்துள்ளனர். அப்போது சுகன்யா மீது சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது.
அடுத்து சதீசையும், சந்திரமோகனையும் நாராயணன் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து உயிருக்கு போராடிய 3 பேரையும், அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுகன்யா பரிதாபமாக இறந்து போனார். மற்ற இருவரும் தொடர்ந்து உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
இது பற்றி தகவல் கிடைத்தவுடன், இணை கமிஷனர் சுதாகர் உத்தரவின் பேரில், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி ஆகியோர் மேற்பார்வையில் சூளைமேடு இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தப்பி ஓடிய நாராயணன் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் சூளைமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!