கவிஞர் வைரமுத்துவை மிரட்டலாம் கனவு காணாதீர்கள்: வைகோ பாய்ச்சல்..!


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களை தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து. தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார்.

அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறி முறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாக சித்தரித்தவையாகும்.

அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக செந்தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அவர் ஆற்றி வருகிற இலக்கிய பணி நன்றிக்குரியதாகும். வைரமுத்து தனி மனிதரல்ல; தமிழர்களின் சொத்து.

விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்து குறித்து அச்செந்தமிழ்க் கவிஞன் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியப் பணியாற்றிவரும் நாளேடும் வருத்தம் தெரிவித்துள்ளது. அவரது கருத்தை விமர்சிப்பது, அது தவறு எனக்கூறுவது ஒவ்வொருவர் உரிமையாகும்.

ஆனால், கவிஞர் வைரமுத்துவை கொடூரமான சொற்களால் இழிவுபடுத்தி மிரட்ட முயல்வதும் உயிருக்கே உலை வைப்போம் என்று கூச்சலிடுவதும், நாளேட்டை அச்சுறுத்துவதும் மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

தென்பாண்டி மண்டலத்தின் தீரமிகு கவிஞரை மிரட்டலாம் என்றோ அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவுகூட காண வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!