மது குடிப்பதற்காக கூட்டி சென்று வாலிபருக்கு நடந்த கொடூரம் – நண்பர்கள் வெறிச்செயல்..!


கடலூரில் வாலிபரை நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள புதுநகரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் காமராஜ்(வயது 22). இவர் நேற்று இரவு கம்மியம்பேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு பின்புறம், தனது நண்பர்களான கே.என்.பேட்டையை சேர்ந்த ரவி மகன் தேவா உள்பட 6 பேருடன் சேர்ந்து மது குடித்தார்.

பின்னர், தேவாவின் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து காமராஜ் வீட்டுக்கு புறப்பட்டார். மற்ற 5 நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றனர். தோவாவும், காமராஜூம் ஜெ.ஜெ.நகரில் வந்தபோது மற்ற 5 நண்பர்களும் மோட்டார் சைக்கிள்களில் வந்து 2 பேரையும் மறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத தேவா மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். 5 பேரும் சேர்ந்து தேவாவை சரமாரியாக தாக்கினர்.

இதனை தொடர்ந்து காமராஜையும் தாக்கி, அவரை தங்களது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றனர். குப்பை கிடங்கு அமைந்துள்ள ஸ்ரீராமுலு நகர் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு 5 பேரும் சேர்ந்து காமராஜை மார்பில் கத்தி, அரிவாளால் வெட்டினர்.

மேலும் அவரது கழுத்தை அறுத்து துடிக்க, துடிக்க படுகொலை செய்தனர். அவர், இறந்ததை உறுதி செய்த 5 நண்பர்களும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காமராஜின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த தேவா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கொலை சம்பவம் நடந்த ஸ்ரீராமுலு நகர் பகுதி இருள் சூழ்ந்தது என்பதுடன், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருக்காது. அதோடு காமராஜ் வசித்து வரும் புதுநகர், திருவந்திபுரம் சாலையில் இருந்து கேப்பர் மலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. எனவே நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சதிதிட்டம் தீட்டி, அவரை மது குடிப்பதற்காக குப்பை கிடங்கு பகுதிக்கு அழைத்து வந்து இந்த படுகொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

தப்பி ஓடியவர்களை பிடித்த பின்னரே கொலையின் பின்னணி என்ன? என்கிற முழு விவரம் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காமராஜ், திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!