திருமண மண்டபத்தில் இன்ஸ்பெக்டர் மாமூல் வாங்கினாரா..? வெளியான வீடியோவால் பரபரப்பு..!


திருமண மண்டபத்தில் இன்ஸ்பெக்டர் மாமூல் வாங்குவதுபோல் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.

சென்னை மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் கண்ணன். இவர், வடபழனி போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், வடபழனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சேரில் அமர்ந்து கொண்டு எதிரே அமர்ந்து இருக்கும் நபரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்.

பின்னர் அந்த நபரிடம் இருந்து பணத்தை வாங்கி தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறுவது போன்ற ஒரு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இன்ஸ்பெக்டர் பணம் வாங்கும் காட்சியை பணம் கொடுத்த நபருடன் இருக்கும் ஒருவரே தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இதனால் திருமண மண்டப உரிமையாளரிடம் இன்ஸ்பெக்டர் மாமூல் பெற்றாரா? என பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் கண்ணனிடம் கேட்டபோது, “இது பழைய வீடியோ. எனக்கும், மற்றொருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது. அது சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தேன். என்னை பழி வாங்க சக போலீசாரே இப்போது அந்த வீடியோவை வெளியிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள்” என்று மறுத்தார்.

அந்த வீடியோவில் உள்ளதுபோல் இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெற்றாரா? என்பதை அறிய சம்பந்தப்பட்ட மண்டபத்துக்கு சென்றபோது, அங்கு மண்டபம் இடிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு யாரும் இல்லை.

இன்ஸ்பெக்டர் வாங்கியது மாமூல் பணமா? அல்லது அவர் கூறுவதுபோல் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பானதா? என்பது குறித்து அறிய அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

இதற்கிடையில் இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கண்ணன், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!