ஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பான்சராகிறதா பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்..?


ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக விளம்பர ஒப்பந்தம் செய்ய பதஞ்சலி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 2018 முதல் 2022 வரையிலான டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை சீனாவின் விவோ நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால் லடாக் பிரச்சனைக்குப்பிறகு சீனா பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இந்த பிரச்சனை பெரிதாகிய சமயம் ஐபிஎல் ஸ்பான்சராக விவோ தொடர்ந்து நீடிக்கும் என்று பிசிசிஐ தெரிவித்தது. இதனால் சமூகவலைதளங்களில் பொங்கி எழுந்த நெட்டிசன்கள் ஐபிஎல்-ஐ புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அரசியல் சார்பிலும், அமைப்புகள் சார்பிலும் மறைமுகமாக எதிர்ப்பு கிளம்பின.

இதனால், ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் தொடர்பாக போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தில் இருந்து விவோ நிறுவனமும்-பிசிசிஐ-யும் விலகின. இந்த நடவடிக்கையால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், காலியாக உள்ள ஐபிஎல் 2020 ஸ்பான்சர் உரிமத்தை வாங்க சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஐபிஎல் ஸ்பான்சர் தொடர்பாக நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத பொருட்கள் தொடர்பான விற்பனையை செய்துவரும் பதஞ்சலி நிறுவனத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான வருவாய் 8 ஆயிரத்து 329 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பை பாபா ராம்தேவின் நிறுவனம் பெறும் பட்சத்தில் டிஎல்எஃப் ஐபிஎல், விவோ ஐபிஎல் வரிசையில் இனி பதஞ்சலி ஐபிஎல் இணையும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!