கணவர் இறந்த துக்கத்தால் மனைவி விபரீத முடிவு..!


தஞ்சையில், கணவர் இறந்த துக்கத்தில் மனைவி ஆற்றில் குதித்தார். அவரை தீயணைப்புத்துறையினர் தேடி வருகிறார்கள்.

தஞ்சை மேல அலங்கம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மனைவி நீலாவதி(வயது 47). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகி விட்டது. வீரமணி, உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீரமணி இறந்து விட்டார்.

இதனால் நீலாவதி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். எப்போதும் அவர், கணவர் நினைவாகவே காணப்பட்டார். கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து அவரால் மீளமுடியவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். இதனையடுத்து நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்த நீலாவதி, தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள புது ஆற்று படித்துறைக்கு வந்தார். அங்கு கரையில் தான் வைத்திருந்த செல்போன் உள்ளிட்டவற்றை வைத்து விட்டு தற்கொலை செய்யும் நோக்கில் ஆற்றில் குதித்தார்.

ஆற்றில் தண்ணீர் அதிக அளவு சென்றதால் அவர் தண்ணீரில் தத்தளித்தபடி அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்தனர். உடனடியாக இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பெரியகோவில் அருகே உள்ள படித்துறை பகுதியில் இருந்து 20 கண்பாலம் வரை தேடினர். ஆனால் நீலாவதி கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவர் இறந்த துக்கத்தால் மனைவி ஆற்றில் குதித்த சம்பவம் தஞ்சை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!