ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு அரசுடைமையானது..!


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம் அரசுடைமையானது.

நினைவு இல்லமாக மாற்ற ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது. 24,322 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகையை தமிழக அரசு செலுத்தி உள்ளது.

நினைவில்லமாக மாற்றுவதை எதிர்த்து தீபா,தீபக் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. போயஸ் தோட்ட கட்டிடங்களுக்கு ரூ 2.73 கோடி, மரங்களுக்கு ரூ.11,047 என நிர்ணயம் செய்துள்ளது.

நிலத்திற்கு சதுர அடிக்கு 12,060 ரூபாய் வீதம் 24,322 சதுர அடிக்கு ரூ.29.33 கோடி டெபாசிட் செய்துள்ளது. தீபா, தீபக் தரப்புடன் உடன்பாடு எட்டப்படாததால், விவகாரத்தை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் செலுத்தும்படி நில கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு அரசுடைமையானது. நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம் அரசுடைமையானது.

உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!