கொரோனாவால் இறப்பவர்களின் உடலை இங்கு அடக்கம் செய்யுங்கள்- பிரதமருக்கு மாணவி கடிதம்

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தால் எங்கள் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று பிரதமருக்கு மாணவி கடிதம் எழுதியுள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி பெரு மாள்கோவில் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் மகள் தென்னரசி. வாடிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்நோயிலிருந்து நாட்டுமக்களை காப்பாற்ற தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் இரவும் பகலும் பாடுபடும் மருத்துவர்கள் மனவேதனையில் உள்ளனர்.

எனது தந்தை சிறு குறு விவசாயி. எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கொரோனா சிகிச்சைக்கு பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், துப்புரவு பணியாளர்கள் யாராவது நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தால் அவர்களின் உடலை எங்கள் நிலத்தில் அடக்கம் செய்ய எனது தந்தை, தாயாரின் ஒப்புதலின்பேரில் சம்மதம் தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உளளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!