கொரோனா வைரசை மனிதனால் உருவாக்க முடியாது.. சீன ஆய்வுக்கூடம் சொல்கிறது


உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரசை மனிதனால் உருவாக்க முடியாது என்று சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக்கூடம் சொல்கிறது.

உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ், வுகான் நகரில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் சந்தையில் தோன்றியதாக கூறப்பட்டு வந்தது.

இதில் திடீர் திருப்பமாக, “இந்த வைரஸ் வுகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது, அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது” என்று அமெரிக்காவின் ‘பாக்ஸ் நியூஸ்’ டெலிவிஷன் வெளியிட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும், நடந்தது என்ன? என்பதை கண்டுபிடிக்கப்போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அது மட்டுமல்ல, அந்த இன்ஸ்டிடியூட்டுக்கு அளித்து வந்த நிதி உதவி நிறுத்தப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

இந்தநிலையில், சர்ச்சைக்குரிய அந்த ஆய்வுக்கூடத்தின் இயக்குனர் யுவான் ஜிமிங், அரசின் சி.ஜி.டி.என். டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்கள் நிறுவனத்தில் என்ன வகையான ஆராய்ச்சி நடக்கிறது? நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது? என்பதை நாங்கள் அறிவோம்.

வைரஸ் எங்களிடம் இருந்து வருவதற்கு வழி கிடையாது.

எங்களிடம் கடுமையான ஒழுங்குமுறை விதிகள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்கான நடத்தை நெறிமுறைகளும் இருக்கின்றன. எனவே நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

எங்கள் வைராலஜி இன்ஸ்டிடியூட்டும், ஆய்வுக்கூடமும் வுகானில் இருப்பதால் மக்கள் உதவ முடியாது. ஆனால் தொடர்பு கொள்ள முடியும்.

எங்கள் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டு, அங்கிருந்துதான் வெளியே வந்துவிட்டதாக அமெரிக்கா கூறும் புகார்கள், துரதிர்ஷ்டவசமானது.

சிலர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். இது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையிலானது.

இதன் நோக்கங்களில் ஒன்று, மக்களை குழப்புவதும், எங்கள் தொற்று தடுப்பு மற்றும் அறிவியல் நடவடிக்கைகளில் தலையிடுவதும் ஆகும். அவர்கள் நோக்கம் ஒருவிதத்தில் நிறைவேறி இருக்கலாம்.

ஆனால் ஒரு விஞ்ஞானி என்ற முறையிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேலாளர் என்ற விதத்திலும், அது சாத்தியம் அற்றது (ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக வைரசை உருவாக்குவது) என்பது எனக்கு தெரியும்.

வைரசை மனிதனால் உருவாக்க முடியாது. கொரோனா வைரஸ் செயற்கையானது என்பதை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் கிடையாது.

சில விஞ்ஞானிகள் ஒரு வைரசை தொகுக்க அசாதாரணமான நுண்ணறிவும், மிகப்பெரிய உழைப்பும் தேவை என்று நம்புகிறார்கள்.

எனவே இது போன்ற ஒரு வைரசை உருவாக்குகிற திறன், தற்போது மனிதர்களிடம் உள்ளது என்று நாங்கள் நம்பவில்லை.

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதுமே, அந்த வைரசின் மரபணு வரிசையையும், விலங்கு மாதிரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியையும் உலக சுகாதார நிறுவனத்துடனும், உணவு மற்றும் விவசாய நிறுவனத்துடனும் பகிர்ந்து கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!