சனி தோஷம் நீங்க சனீஸ்வரனுக்கு எப்படி விரதம் இருத்தல் வேண்டும்..?


நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் சனி கிரகத்தின் பார்வை தான் ஒருவருடைய பாவ – புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது.

நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சனி கிரகம் இருக்கிறது. இதன் பார்வை தான் ஒருவருடைய பாவ – புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது. சனியின் ஆதிக்கம் கொண்டவர்கள், நீதி நேர்மையுடனும், நன்னடத்தையோடும் வாழ விரும்புவார்கள். ஆனால் இவர்களது சத்தியத்திற்கு அவ்வப்போது சோதனை வந்து போகும். இந்த நபர்கள் தயாள குணம், தர்ம சிந்தனையை கடைப்பிடிப்பார்கள். இவர்களுக்கு தலைமைப் பதவி தேடி வரலாம். ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி முடியும் தருவாயில் ஒரு வருக்கு சனி கொடுக்கும் வாழ்வானது, நிரந்தர யோகமாக அமையும். ஏழு தலைமுறைகளுக்காக சொத்துகளைச் சேர்க்கும் யோகத்தை தருவது சனி பகவான் தான்.

ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெறும் பாவ புண்ணிய கணக்குகளை சரிப்பார்த்து,அவர்கள் மனம் திருந்துவதற்கு சில கடுமையான சோதனைகளைக் கொடுத்து திருத்தும் தர்ம தேவதையே சனி பகவான். அவரின் சோதனைக்கு உட்படாதவர்களே யாரும் இருக்க முடியாது.

சனிக்கிழமைதோறும் விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும். சனி பகவானின் வாகனமான காகத்திற்கு தினமும் எள் கலந்த சாதம் வைக்கலாம். இதனால் ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் ஒரு ஜீவனுக்கு உணவளித்த மனதிருப்தியும் கிடைக்கும்.

சனி பகவானுக்கு உகந்த உலோகம் இரும்பு என்பதால், சனிக்கிழமை தோறும் இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடலாம்.

கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் அவரின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மரங்களில் வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி மட்டும் தான்.ஈஸ்வரனின் அருளைப் பெற்ற சனி பகவானை சந்தோஷப்படுத்த, சனிக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சாற்றி வணங்கலாம்.

பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும். சனி பிரதோஷ வழிபாடு அனைத்திலும் சிறந்தது.

சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும். குறிப்பாக சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இதுவும் ஆரோக்கிய ரீதியாக நமது நன்மையைக் கருதி சொல்லப்பட்டது.

அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்வதுடன், உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள். ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். இவை நம்மை மனித நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்த்தும்.இதை தானே நியாய தேவதையான சனி பகவானும் நம்மிடம் எதிர்பார்ப்பது.

சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சனி தோஷம் நீங்காது. ஆனால் சனி தோஷத்தால் ஏற்படும் துன்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும். -Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!